படம் : அப்பாவி
Mark : *****(5/5)
IMDB Rating : 9.999
ஹைலைட்: படத்தில் வரும் பன்ச் டயலாக் மற்றும் வசனங்களை சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் (ஒரு ஆட்டோக்கு ஒரு டயலாக்) எழுதினால் வசனங்கள் மிஞ்சும்.
கதை
முதல் காட்சியில் ஒரு சின்னபையன் கொலை செய்கிறார். இரண்டாவது காட்சியில் சக மாணவியை கிண்டல் செய்யும் நண்பர்களை பன்ச் டயலாக் மூலம் திருத்துகிறார்.
“அழகா இருக்க பூவெல்லாம் வாசமா இருக்கறதில்ல. வாசமா இருக்கற பூவெல்லாம் அழகா இருக்கறதில்ல” அவர் இப்படி பேசும்போது எதிரில் இருப்பவனை எட்டி மிதிக்கவேண்டும்போல் தோன்றுகிறது.
மூன்றாவது காட்சியில் பாட்டு பாடுகிறார். ஓ! அப்ப அவர்தான் ஹீரோவா. ஹீரோவை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்க்குள் மூன்று நான்கு கொலைகள் நடந்துவிடுகிறது. ஹீரோவை மிகவும் நல்லவராக காட்டுவதற்காகவே ஒரு பெண்ணிற்கு கருப்பு பெயின்ட் அடித்து கதையின் இருபதாவது நிமிடத்தில் சாகடிக்கிறார்கள்
பகலில் மாணவனாகவும் இரவில் எமனாகவும் வாழ்கிறார். தப்பு யார் செய்தாலும் அடுத்த ஒரு மணிநேரத்தில் சாகடிக்கிறார். MLA வை சாகடிக்கிறார். MP யை சாகடிக்கிறார்(அவங்களுக்கெல்லாம் செக்யூரிட்டியே இல்லையா?) ஹைதராபாத்தில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதியை மறுநாளே பார்த்தசாரதி கோயில் குளத்தில் கண்டுபிடித்து கொல்கிறார். எல்லாரையும் கொல்லும்முன் அவர்களை பேசவிட்டு படம் எடுத்து தமிழ்நாட்டுக்கே MMS அனுப்புகிறார். MMS எப்படி செல்கிறது என்பதை காட்ட கிராபிக்ஸ் வேற செய்திருக்கிறார்கள்.
இவர் இப்படியென்றால், ஹீரோயின் வரும் காட்சிகள் மிகவும் கொடுமை.ஹீரோயின் படம் முழுக்க பேசுவது நாலே நாலு டயலாக். ஆம்! நீங்கள் நினைத்தது போல் அவர் வில்லனின் மகளே.
1. ஹாய்! ஐ அம் ரம்யா
2. பாரதி ஐ லவ் யு
3. பாரதி ஐ லவ் யு(இந்த டைம் டூயட்)
ஹீரோயின்க்கு காதல் எதற்கு வருகிறதென்று அவருக்கும் தெரியவில்லை. படம் பார்க்கும் நமக்கும் தெரிவதில்லை. ஹீரோயின் பேசும் கடைசி டயலாக் கொஞ்சம் பெருசு(ரெண்டு லைன்) என்பதால் எல்கேஜி பொண்ணு போல் மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்(கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்). படத்தில் இவர்கள் ரெண்டு பேரையும் தவிர இருப்பது காமெடி(அப்டி வேற ஒன்னு இருக்கா?). காமெடிக்காக யாரும் மெனக்கெடவில்லை. நீங்கள் மொபைல் வாங்கிய காலத்திலிருந்து உங்களுக்கு வந்த sms களை நினைவில் வைத்திருந்தால் அதுவே படத்தின் காமெடி ட்ராக். இதையாவது பொறுத்துக்கொள்ளலாம் என்றால், படத்தில் வரும் எல்லோரும் குறைந்தது ஒரு பன்ச் டயலக்காவது பேசுகிறார்கள். உதாரணம்
“உங்களுக்கு நீதிதான் தெரியும். எங்களுக்கு நீதிபதியே தெரியும்”
“இப்பெல்லாம் கொலை பண்றவந்தான்டா ஹீரோ”
"நீங்கெல்லாம் சொந்த பிரச்சனைய சமுதாய பிரச்சனையா பாக்குறீங்க. ஆனா அவன் சமுதாய பிரச்சனைய சொந்த பிரச்சனையா பாக்குறான்"
இதையெல்லாம் விட படத்தில் இன்னொரு முக்கியபுள்ளியாக ஹீரோவின் அம்மா. முதல் பாதியில் கலெக்டராக அலப்பறை செய்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதியின் மனைவியை அழைத்து “உங்க புருஷனுக்கு விரோதி யாராவது இருக்காங்களா?” என்று கேட்கிறார்(என்ன விளையாட்டு இது?). இவர் செய்யும் அலப்பறையில் அரசியல்வாதிகள் இவரிடம் MMS கொலைகாரனை கண்டுபிடிக்க சொல்கிறார்கள். ஆனால் இவர் அதை விட்டுவிட்டு மகனுக்கு இட்லி, வடை, மற்றும் முறுக்கு மட்டுமே சுடுகிறார்.
ஆனால் இவர் க்ளைமாக்சில் கொலைகாரனை கண்டுபிடிப்பது உலக சினிமா வரலாற்றில் முதல் முறை.3GP வீடியோவை ஓடவிட்டு ஜூம் செய்தால் செத்தவனின் கண்களில் கொலை செய்தவனின் முகம் தெரிகிறது. என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு.படத்தின் முடிவும் உலக சினிமா வரலாற்றில் புதிய முயற்சி. பாடல்களை நான் பார்க்கவில்லை. எனவே அதைப்பற்றி நோ கமெண்ட்ஸ்
இயக்குனர் சொல்லவந்தது என்னவோ நல்ல விஷயம்தான். ஆனால் நம்மால்தான் எதையும் நம்பமுடியவில்லை.
பி.கு
படத்தோட ட்ரெய்லர் கூட எங்களால பாக்கமுடியலன்னு சொல்றவங்க எல்லாம் படத்த முழுசா பாத்த என் நிலைமையை கொஞ்சம் நெனச்சி பாருங்க.ப்ளீஸ்
Saturday, May 14, 2011
Sunday, May 8, 2011
அர்ச்சனா - மிஷன் இம்பாசிபிள்
“இன்னும் என்னடா பண்ற. டைம் ஆயிடிச்சி பாரு. சீக்கிரம் கெளம்பு. அண்ணனுக்கு(வினோத்) பொண்ணுபாக்க(அர்ச்சனா) போகனும்னு தெரியாதா?” என் அம்மா என்னை அவசரபடுத்தினாள். நாங்கள் அனைவரும் வீட்டிலிருந்து கிளம்பினோம்
எங்க வீட்ல நாந்தான் கடைசி பையன். அதுக்காக ரொம்ப செல்லம்னு நெனச்சிராதீங்க. சமையல் வேல, துணி துவைக்கிற வேலையைத்தவிர, எல்லா வேலைலயும் என்னோட contribution மட்டும்தான் இருந்திச்சி. ச்சே! மூத்த பையனாவே பொறந்திருக்கலாம்.
சரி! விஷயத்துக்கு வருவோம். பொதுவா பசங்க பொண்ணுங்கள பிக்கப் பண்ண ரெண்டு வழியதான் யூஸ் பண்ணுவாங்க.
முதல் வழி வலையபோட்டு மீன் பிடிக்கிற மாதிரி. நெறைய பேருக்கு application போட்டு அதுல நல்லதா பாத்து செலக்ட் பண்ணுவாங்க.
ரெண்டாவது வழி, தூண்டில் போட்டு மீன் பிடிக்கிற மாதிரி. சில சமயம் மாட்டும். சில சமயம் மாட்டாது. சில பேருக்கு நல்லதா மாட்டும். சில பேருக்கு கெட்டதா மாட்டும். ஆனா, மூணாவது வழியும் ஒன்னு இருக்கு.
அதுதான் ஒரே ஒரு பொண்ணு பின்னாடி மட்டும் சுத்தி(அவ போற இடமெல்லாம்) அந்த பொண்ண கடுப்பேத்துறது. இது ஓடைல சின்னபசங்க ஒரே ஒரு மீன மட்டும் துரத்தி துரத்தி பிடிக்கிற மாதிரி. இதுக்கு வலையும் தேவையில்ல. தூண்டிலும் தேவையில்ல. நம்பிக்கை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி இதெல்லாம் மட்டும்தான் வேணும். இந்த வழிதான் எங்க அண்ணன் யூஸ் பண்ணது. அதுக்காக அவனுக்கு சூடு சொரணை எல்லாம் இல்லன்னு நீங்க நினைக்ககூடாது. அவன் ஆளப்பத்தி தப்பா சொன்னா கோவம் பொத்துகிட்டு வரும்.
எங்க அண்ணன் மொதல்ல சுத்துன பொண்ணு பேரு நான்சி. ஆமாம், இந்து கிறிஸ்டியன் இனக்கலவர காதல். இவன் எங்க வீட்டு மாடில 10th எக்சாமுக்கு படிக்கும்போது அந்த பொண்ணு அவங்க வீட்டு மாடில 7th எக்சாமுக்கு படிக்க….எங்க அண்ணனுக்கு பத்திகிச்சு. எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா வீடே பத்திக்கும்.
ரெண்டு மெகாசீரியல் பீரியடா நான்சி பின்னாடி சுத்தி(நான்சி போற இடமெல்லாம்), கண்லயே பேசி, ஒரு நாள் போன்ல பேசினான்.
“நான்சி! என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?” வினோத்
“ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி !” நான்சி.
பொதுவா நம்ம கூட நல்லா பழகாத பொண்ணுங்க இப்படி சிரிச்சா ‘நீ ஒரு காமெடி பீசு/காமெடி பண்ணாத’ னு அர்த்தம். இது எங்க அண்ணனுக்கு இன்னிக்கி வரைக்கும் புரியல. நான்சி சிரிச்சத வச்சி, ஏசுவே இவங்க காதலுக்கு சம்மதம் சொன்னதா நெனச்சிகிட்டு இவன் நான்சியோட அப்பாகிட்ட பேச, அவரு வாழப்பழத்துல ஊசி ஏத்துரமாதிரி ஏதோ சொல்லி அனுப்பிட்டாரு. நம்ம ஆளு அப்செட்.
போன சம்மர் வரைக்கும் எங்க பாத்தாலும் “அதோ பாரு அப்போல்லோ பஸ்”னு இவன் சொன்னதுக்கு அர்த்தம் எங்கம்மா முந்தாநேத்து முழு கதையும் சொன்னப்பதான் வெளங்கிச்சி. நான்சி இப்போ அப்போல்லோல வேல செய்யுதாம்.
இதுக்கு நடுவுல எங்க வீட்ல வினோத்க்கு பொண்ணு பாத்தாங்க. ஒரு டஜன் பொண்ணுங்க போட்டோ பாத்தப்புறம் யாருமே நான்சி மாதிரி இல்லன்னு ரிஜெக்ட் பண்ணிட்டான். அதுக்கு யார் என்ன பண்ணுவா. நான்சிக்கு தங்கச்சி கூட இல்ல.
ரொம்ப முயற்சிக்கப்புறம் அந்த மீனு(நான்சி) எந்த பாசிக்குள்ள போச்சின்னு தெரியாம, நான்சிய மனசுல இருந்து பினாயில் போட்டு கழுவிட்டான். அவன் அடுத்து பாத்த பொண்ணு அர்ச்சனா.
இவன் அந்த சாப்ட்வேர் கம்பெனில சேர்ந்து ஒரு வருஷம் முடிஞ்ச அன்னிக்கிதான் அர்ச்சனாவ பார்த்தானாம். பாத்த அன்னிக்கே இவன் மனசு ஒரு வாளி பெவிகால்ல குளிச்சிட்டு அர்ச்சனா மேல ஒட்டிகிச்சி. அவ வேற இவனபாத்து வெட்கபட்டாளாம். நேரம்டா சாமி!. அடுத்த பத்தாவது நிமிஷம் இவன் சிஸ்டம்ல இருந்து பேஸ்புக் வரைக்கும் பாஸ்வேர்ட் அர்ச்சனா. இவன் ப்ரோக்ராம்ல கண்டுபிடிச்ச bug பேரும் அர்ச்சனா.
ஒரே கம்பெனி. தடுக்கி விழுந்தா கூட அவ மேல விழற அளவுக்கு தூரம். ஆபீஸ் காண்டக்ட்ஸ் ல இருந்து நம்பர் எல்லாம் எடுத்து அடுத்த மிஷனுக்கு தயாராகி, அவ போற எடமெல்லாம் வோடபோன் நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே போய்(பல நாள் அவ ஹாஸ்டல் முன்னாடி நின்னு, அசிங்கப்பட்டு) அர்ச்சனாவுக்கு ப்ரொபோஸ் பண்ணா, அர்ச்சனா எதுவுமே சொல்லல. பல நாள் முயற்சிக்கப்புறம் இவனும் டயர்ட் ஆயிட்டான்.
“நேத்து ஏன் எனக்கு sms பண்ணல” அர்ச்சனா
“போ! நீதான் என்ன பிடிக்கலன்னு சொல்லிட்ட இல்ல” வினோத்
“நாங்க அப்படிதான் சொல்லுவோம். நீங்கதான் கன்வின்ஸ் பண்ணனும்” அர்ச்சனா. அடுத்த ரெண்டு மணிநேர சாட்டிங்க்கு அப்புறம் இவனோட மிஷன் சக்சஸ் ஆகி வீட்லயும் சம்மதம் வாங்கியாச்சி. இவன் இப்படின்னா அர்ச்சனா அவங்க வீட்ல சம்மதம் வாங்கினது வித்தியாசமான முறை.
“அப்பா! எனக்கொரு மேரேஜ் ப்ரோபோஸல் வந்திருக்கு” அர்ச்சனா
“அந்த பையன்………………………” சுந்தரம்(அர்ச்சனாவின் அப்பா)
“கண்டிப்பா நம்ம ஜாதி இல்ல” அர்ச்சனா
“வேண்டாம் விடு! வேற பாத்துக்கலாம்” சுந்தரம்
“இல்லப்பா! எனக்கும் அவர பிடிச்சிருக்கு. அதான்….” அர்ச்சனா
“ஒரு முறை சொன்னா கேளு. வேண்டாம்னா வேண்டாம்” சுந்தரம்
“நீங்க என்ன சொன்னாலும் சரி! நான் அவரதான் கல்யாணம் பண்ணிக்குவேன். கட்டிவைப்பீங்களா! மாட்டீங்களா!.....” அர்ச்சனா. பல நாள் போராட்டத்திற்குபின் அர்ச்சனா சுந்தரத்தை சம்மதிக்க வைத்தாள். நல்ல பேமலியா இருந்தா அவருக்கு ஒகே வாம்.
நாங்கள் அனைவரும் அர்ச்சனாவின் வீட்டை அடைந்தோம். ஒரு குண்டு பெண்மணி எங்களை வரவேற்றார். எங்க அண்ணன பத்தி இவ்ளோ சொன்னேன். என்னபத்தி….
என் பேரு விக்னேஷ். சுருக்கமா விக்கி. என் வெகுளித்தனத்தால் ஒரு சிலரை கவர்ந்த நான் பல இடங்களில் சாபங்களை மட்டுமே வாங்கினேன்.
வீட்டின் உள்ளே ஒரு பெரியவர் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த வீட்டு நாய் டீவி பார்த்துக்கொண்டிருந்தது.
“டாமி! போய் அர்ச்சனா, டாடி, மம்மியெல்லாம் வரசொல்லு” குண்டு பெண்மணி நாயை விரட்டினார்.
“ஹாய்! ஐ அம் ஸ்ருதி. நான் அர்ச்சனாவோட கசின் சிஸ்டர். இதுல யாரு மாப்ள” குண்டு பெண்மணி சுய அறிமுகம் செய்துகொண்டாள்.
“ இதோ பேயறஞ்ச மாதிரி இல்ல. இவருதான்” நான்
“அசடு வழியும்போதே நெனச்சேன். ஹி ஸ் லுக்கிங் ஸ்மார்ட். அர்ச்சனா ஸ் வெரி லக்கி” ஸ்ருதி. ஹாலில் இருந்தா போட்டோவில் ஒரு பெண் கரடிபொம்மையோடு பல்லிளித்தாள்.
“வினோ! அந்த போட்டோல இருக்கிற ரெண்டு கரடி பொம்மையும் நல்லா இருக்கு இல்ல!” நான்
“டேய்! அதான்டா அர்ச்சனா” வினோத்
“சாரி! சாரி!. பேஸ்கட் ஒரே மாதிரி இருந்திச்சா. அதான்” நான்
“சரி! நீங்க பேசிகிட்டு இருங்க. லக்ஷ்மியும் கோபாலும் இப்ப வந்துருவாங்க” ஸ்ருதி
“லக்ஷ்மி யாரு?” நான்
“என்னோட அக்கா. கூடவே ஜெயபாலும் வருவார்” ஸ்ருதி.
“ஆக்சுவலா லக்ஷ்மிக்கு எத்தன புருஷன்?” நான்
“யு இடியட். வாட் ஸ் திஸ்? ஜெயபால் என்னோட ஹஸ்பன்ட்” ஸ்ருதி என்னை முறைத்தார்.
“சாரி! ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்திச்சா, அதான் கன்ப்யூஸ் ஆயிட்டேன்”
“கொஞ்ச நேரம் வாய வச்சிகிட்டு சும்மா இருக்கமாட்டியா?” என் அண்ணன் என்னை திட்டினான். சிறிது நேரம் கழித்து அந்த வீட்டு நாய் எல்லோரையும் அழைத்துவந்தது.
“அப்புறம் தம்பி என்ன செய்றீங்க?” சுந்தரம்.
“ஒரு இத்துப்போன சாப்ட்வேர் கம்ப்….…………….” நான்
என் தாய் இடைமறித்து
“வினோத் அர்ச்சனா வேல செய்ற கம்பெனில ப்ராஜெக்ட் லீடர்ஆ வொர்க் பண்றான்”
பின் இரு வீட்டாரும் பல விஷயங்களைப்பற்றி பேசினர். அர்ச்சனாவின் தந்தை பல விதிமுறைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார். என் அம்மா அவர்களின் விதிமுறைகளுக்கு பிடிகுடுக்கவில்லை(மாப்ள வீடுன்னா சும்மாவா?). அர்ச்சனாவை மட்டும் எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் பிடித்துப்போனது.
“அதுல பாருங்க! பொண்ணுக்கு மூல நட்சத்திரம். பையனோட அப்பாவுக்கு ஆகாது. அதான் கொஞ்சம் யோசிக்கிறோம்” சுந்தரம்.
“அதுனால என்ன! நாளைக்கே எங்க அப்பா கதைய முடிச்சிடலாம். உங்க வீட்லயும் ஒரு பெருசு இருக்கு. அதையும் முடிச்சிட்டா பதினாலு நாள்ல காரியம். அடுத்த முஹூர்த்தத்திலேயே கல்யாணத்த வச்சிக்கலாம். என்னப்பா! இதுல உங்களுக்கு சம்மதம்தான” நான்
என் அப்பாவின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.
“எங்களுக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல” என் அம்மா
“சரி! பையனோட பயோ-டேட்டாவ எனக்கு மெயில் பண்ணிடுங்க. கூடவே சாலரி ஸ்லிப் எல்லாம் அனுப்பிடுங்க. நாங்க ஒரு டூ டேஸ் கழிச்சி சொல்றோம்.
ரெண்டு நாள் கழித்து எந்த பதிலும் வந்தது போல் எனக்கு தெரியவில்லை. ஆனால் என் குடும்பத்தினரிடம் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. வினோத் ப்ரமை பிடித்தவன் போல் சுற்றிக்கொண்டிருந்தான். அடிக்கடி தேவையில்லாமல் என்னிடம் சண்டை போட்டான். என் அப்பா என்னிடமிருந்து விலகி ஓடினார். என் வேலையெல்லாம் நானே செய்துகொள்ளும்படி உத்தரவு வந்தது.
“உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுடா. சாகர வரைக்கும் நீ தனிக்கட்டதான்” என் அம்மா சாபம் விட்டார். நாட்டாமையின் தீர்ப்பே இல்லாமல் நான் வீட்டிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன். விசாரித்தபோதுதான் அர்ச்சனாவின் தந்தை எங்கள் குடும்பத்தை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாகவும், அதற்கு முக்கிய காரணம் விக்கி(நாந்தான்) என்று சொல்லிவிட்டதாகவும் தெரியவந்தது.
என் அண்ணன் அர்ச்சனாவுடன் பலநாள் வாக்குவாதம் செய்தபின் அந்த கம்பெனியிலிருந்து விலகி வேறொரு கம்பெனியில் சேர்ந்தான். அங்கே நந்தினி.
ஆறுமாத காலத்தில் அவனுடைய பழைய திறமைகளை உபயோகித்து நந்தினியை மடக்கினான். எல்லாம் சுபமாக முடிந்து பெண் பார்க்க செல்லும் நாளும் அறிவிக்கப்பட்டது. அன்றும் அவர்களோடு நான் கிளம்பியபோது மூவரும் கோரஸாக
“நீ வராதடா! நீ வந்தா எதுவும் வெளங்காது”
என்ன தனியா விட்டுட்டு எல்லாரும் போய்ட்டாங்க. பரவால்ல! நல்லது நடந்தா சரி. எங்க அண்ணன் சிஸ்டம் பாஸ்வேர்ட் இப்ப என்னவா இருக்கும்?. வேறென்ன
நந்தினி.
Subscribe to:
Posts (Atom)
Powered by Blogger.
Followers
About Me
Blog Archive
Labels
- Case study (1)
- cinema (1)
- comedy (7)
- engagement (1)
- Father (1)
- how to pickup girls (1)
- love (4)
- Movie Review (1)
- romantic comedy (1)
- Short film (1)
- suspense (3)
- vadai poche (1)
- அழகியல் (1)
- சும்மா (1)
- மக்கு ஸ்டுடண்ட் (1)