“ஹலோ! நீங்கதான் இந்த காலேஜோட மக்கு ஸ்டுடண்டா?”
இந்த கேள்வியை கேட்டதும் என்னோட சேர்த்து அந்த ஏரியால இருந்த எல்லாரும் திரும்பி பாத்தாங்க. ராகேஷ் மட்டும் என்னை பாத்து நீ இல்லடான்னு சொல்லி கூட்டிட்டு போனான். அதாவது நான் காலேஜோட ஆவரேஜ் ஸ்டுடண்டா இருந்தேன். அப்பப்போ மக்கு ஸ்டுடன்ட் கேட்டகரிக்கு போய் அட்டன்டன்ஸ் போட்டுட்டு வந்தேன்.
உண்மை என்னன்னா மக்கு ஸ்டுடண்டா கூட இருந்துடலாம். இந்த ஆவரேஜ் ஸ்டுடண்டா இருக்கறது பெரிய கஷ்டம். எப்ப எந்த பேப்பர் கவுக்கும்ன்னு தெரியாம, தலைபிரசவத்துக்கு காத்திருக்கிற பொண்ணு மாதிரிதான் பசங்கெல்லாம் ரிசல்ட பாக்க காத்துகிட்டு இருப்பாங்க. நடக்கறது நடக்கட்டும்ன்னு இருக்கிற கொஞ்ச பேர்ல நானும் ஒருத்தன். என்னதான் என்னபத்தி எக்ஸ்ப்ளைன் பண்ணாலும், அந்த மக்கு ஸ்டுடன்ட் லிஸ்ட்ல இல்லாம இருக்கற என் பேருக்காக நானும் அப்பப்போ வெளிய இருந்து ஆதரவு தந்துக்கிட்டுதான் இருந்தேன்.
நீங்க பொதுவா ஒரு அரியர் வாங்கினாலும் உங்கள மக்கு லிஸ்ட்ல சேத்துருவாங்க. நோட்ஸ் கிடைக்காது. எக்ஸாம் ஹால்ல சீட் கூட கெடைக்காது. எனக்கும் அப்படிதான் ஆச்சி. எல்லாரும் லைப்ரரி புக்க கிழிச்சி எடுத்துட்டு போய் காபி அடிக்க, நானும் புக்க கிழிச்சா ஜூனியர்ஸ் படிக்க புக் இருக்காதுன்னு பொதுநலத்தோட புக்கையே உள்ள எடுத்துட்டு போய் காபி அடிச்சி பாஸ் பண்ணேன்.
அடுத்து வேல. வேல கிடைச்ச ரெண்டாவது நாளே என்ன நார்த் இந்தியாக்கு அனுப்புனாங்க. கேட்டதுக்கு தமிழ்நாட்டுல வேல செய்றவன் சாதாரண பூபதி! நார்த் இந்தியாக்கு போறவன்தான் ஆல்தோட்ட பூபதினு வசனமெல்லாம் பேசி ஒரு முக்கியமான கேள்வி கேட்டாங்க
“உனக்கு ஹிந்தி தெரியுமா?”
எனக்கு ஹிந்தில தெரிஞ்ச ஒரே வார்த்தை “ஏக் மார் தோ துக்கடா”. இத கேட்ட எல்லாரும் சிரிச்சி
"நீ தனியா போகல. கூட இன்னொரு ட்ரைனி வருவாரு. பேரு ஜவஹர்"
இவன பத்தி நாம அப்புறமா பேசுவோம்.
நான் போகவேண்டிய ஊருக்கு நேரா ட்ரெயின் இல்ல. ரெண்டு ட்ரெயின் மாறிதான் போகணும். நார்த் இந்தியாக்கு போகும்போது சும்மா போகக்கூடாதுன்னு மூணு பெட்டிய வேற குடுத்துட்டு போய்ட்டாங்க. ஹவ்ரா எக்ஸ்பிரஸ்! மூணு வசூல் எக்ஸ்பிரஸ்(உயர்திரு ரயில்வே காவல் துறை அதிகாரிகள்) என்ன சுத்தி நின்னுகிட்டு
“பெட்டிக்கு பில் இல்ல. இங்கயே கவனிக்கிறியா? இல்ல கூடூர்ல இறங்கிக்கிறியா?”
என் பக்கத்துல அதுவரைக்கும் இருந்த ஜவஹர் திடீர்னு காணாமபோய்ட்டான். நானும் நல்ல யோசிச்சி கூடுர்ல இறங்கிக்கறோம்னு சொல்லிட்டு தூங்கி எழுந்தா விஜயவாடவே வந்திடிச்சி. அடுத்த ட்ரெயின் 10.30am க்கு. 10.25am வரைக்கும் ட்ரெயின் எந்த ஃபிளாட்பார்ம்க்கு வருதுன்னே தெரியல. நாலு ஃபிளாட்பாரம் தள்ளி இருக்கற ட்ரெயின்க்கு என் கூட வந்த ஜவஹர்தான் எல்லா பெட்டியையும் தூக்கிட்டு வந்தான்.
“என்ன பாக்கற? நான் கொக்கோ பிளேயர். நல்லா ஓடுவேன்” ஜவஹர்
“அதான் நேத்து நைட்டே பாத்தனே” – நான்.
நம்மாளு மொரச்சிட்டு உள்ள போனான். நைட் 12 மணி அடிக்க 5 நிமிஷம் முன்னாடி 'மை டியர் லிசா'ல வர பேய் பங்களா கொல்லப்பக்கம் மாதிரி இருக்கிற ஒரு எடத்துல இறக்கிவிட்டுட்டு அதுதான் நாங்க இறங்கவேண்டிய ஊருன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. ஒரு வழிய ரூம்க்கு போனா ஒரே பசி…
“நைட் 12 மணிக்கு என்ன இருக்கும்?” நான்
“தெரு முனைல கடை இருக்கும். ‘சாவல்’ ன்னு கேட்டா சாப்பாடு குடுப்பாங்க” அறை நண்பன்
அவன் சொன்னதா வச்சி நானும் போன இடத்துல ஒரு பொட்டிக்கடை இருந்திச்சி. ஜவஹர் என்கூட வரல.
உள்ளபோய் ‘சாவல்’ன்னு கேட்டதும் ஒரு தட்டுல சோத்த கொண்டுவந்து வச்சிட்டு போய்ட்டான். கொழம்பு இல்ல. கொழம்புக்கு என்ன சொல்லி கேக்கறதுன்னும் தெரியல. அவன கூப்பிட்டு டீ ஆத்துற ஸ்டைல்ல நானும் என்னென்னவோ செஞ்சு காட்டினதுக்கு அப்புறம் அந்த வார்த்தய சொன்னான்.
“ச்சாம்பார்”
“ராசா! தெய்வம்டா நீயி!” அப்படின்னு மண்டைய ஆட்னதும் கொண்டு வந்து ஊத்துனான் பாருங்க! நம்ம ஊர்ல உரி அடிக்கும்போது ஊத்துற மஞ்சத்தண்ணி மாதிரியே இருந்திச்சி. நம்ம ஊரு பொண்ணுங்களா இருந்தா அதுல இருந்து தண்ணி, மஞ்சள் ரெண்டையும் பிரிச்சி இருப்பாங்க. இதுக்கு பேருதான் வெளியூர்ல (கஷ்டப்பட்டு) வேல செய்றதோன்னு நெனச்சிட்டு போய் மறுநாள் வேலைக்கும் சேர்ந்தாச்சி. மறு நாள் மதியமும் அதே மாதிரி ஒரு பிரச்சனை.
மாட்டு கொட்டா மாதிரி இருந்த அந்த கடைல போய் நானும் ஜவஹரும் நின்னோம். எல்லாரும் அவங்கவங்க ரேஞ்ச்க்கு சப்பாத்திய(ஊறுகாயோட) உள்ள எறக்கிட்டு இருந்தாங்க. நேத்து மாதிரி எதுவும் ஆகக்கூடாதுன்னு நானும் கேர்ஃபுல்லா ‘ரெண்டு’ சப்பத்திய மட்டும் தின்னுட்டு பில் கவுன்ட்டர்ல போய்
“டூ சப்பாத்தி. கித்னா?” நான்
கவுன்டர்ல இருந்தவன் கூட்டத்துல இருந்த ஒருத்தன கூப்ட்டு என்னவோ கேட்டுட்டு
“தோ கானா! பசாஸ் ருபையா(ஃபிப்டி ருபீஸ்)!” - கடைக்காரன்
எனக்கு சாப்பிட்ட ரெண்டு சப்பாத்தியும் வெளியே வந்துரும் போல இருந்திச்சி.
“அட பச்சல புடுங்கி! நான் ரெண்டு சப்பாத்தி மட்டும்தாண்டா சாப்ட்டேன். அது 50 ரூபாயா? என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு.
"தோ சப்பாத்தி கித்னா?” - நான்
“தோ கானா! பசாஸ் ருபையா?” - கடைக்காரன்
பின்னர் அங்க இருந்த ஒரு ஆளு, நீங்க சாப்டது ரெண்டு(ஜவஹரையும் சேர்த்து) சாப்பாடு. ஒரு சாப்பாடு 25rs. எவ்ளோ சப்பாத்தி வேணும்னாலும் சாப்டலாம்ன்னு வெளக்குனாறு. அதுக்கப்புறம் டைலியும் 10, 15 சப்பாத்தின்னு சாப்ட ஒரு மாசம் கழிச்சி நீ மட்டும் உள்ள வரக்கூடாதுன்னு ‘wanted board’ போட்டு என்ன வெளியே நிப்பாட்டிட்டாங்க
நான் நார்த் இந்தியால வேல கத்துக்கிட்டனோ இல்லையோ! ஹிந்தி, அதிகமா சாப்டறது எப்படி! ரெண்டையும் சேர்த்து கத்துக்கிட்டு இந்தியாவ ரெண்டா பிரிச்சி ஒரு பாதிய சுத்துனதுக்கு அப்புறம் என்ன துபாய்க்கு வேலைக்கு கூப்டாங்க. எங்க வீட்ல இருந்து நான்தான் மொத முறையா வெளிநாடு போறேன். நான் தனியா போகல. என்கூட அதே கம்பெனில சேர அஷ்வின்னு ஒருத்தர். நானும் மாடர்னா இருக்கே பேரு. பையன்தான்னு நெனச்சிட்டு ஃப்ளைட்ல உக்கார்ந்தா வந்தது ஒரு 45 வயசு ஆளு.
“அஷ்வின்! இந்த பேர வச்சிதான் நான் ஏமார்ந்துட்டேன்”
ஃப்ளைட விட்டு இறங்கினதும் எல்லாரும் ஓட ஆரம்பிச்சாங்க. “என்னங்கடா! அம்மன் கோயில்ல கூழு ஊத்துற மாதிரி இந்த குத்து குத்துரீங்கன்னு திரும்பி பாத்த அஷ்வின காணோம். ஒருவேல இவரும் ஜவஹர் மாதிரி கொக்கோ ப்ளேயரா ! அதான் சொல்லாம ஓடிட்டாரன்னு தேடினா தலைவர் ஆண்களின் அழகு நிலையமான பாத்ரூம்க்கு போய் மூஞ்செல்லாம் கழுவி தலை சீவிட்டு(நாங்களும் சீவுவோம்! சீப்பும் வச்சிருக்கோம்- வடிவேலு ஸ்டைல்) பொறுமையா வெளிய வரதுக்குள்ள நாலு ஃபிளைட் ஆளுங்க எங்களுக்கு முன்னாடி ஓடிட்டாங்க.
அங்க போனா சென்னைல நடக்கபோற இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்க்கு டிக்கெட் வாங்க போனவன் மாதிரி ஒரு பெரிய ஃக்யுல நின்னுகிட்டு இருந்தோம். ஒரு அரபி எங்ககிட்ட வந்து.
“விசா இல்ல! அதோ அந்த ஃக்யுல போய் விசா வாங்கிட்டு வாங்க”ன்னு சொன்னான். விசா வாங்கிட்டு வரதுக்குள்ள இன்னொரு ஃபிளைட் கூட்டம் ஃக்யுல சேர ஒன் ஹவர் நின்னு ஐ டெஸ்ட் பண்ணா மெஷின் என் கண்ண சென்ஸ் பண்ணவே இல்ல. சீட்ல இருந்த அரபி பொண்ணு எழுந்திரிச்சி வந்து
“உன்ன விட உன் கண்ணு கருப்பா இருக்கு”ன்னு அரபில திட்டிட்டு போனதும் மொத முறையா எனக்கு என் கண் மேல கோவம் வந்திச்சி.
எல்லாம் முடிச்சிட்டு வெளிய போனா நாங்க ரொம்ப லேட்டா வந்துட்டோம்ன்னு பிக்கப் பண்ண வந்த டிரைவர் 160kmphல வண்டி ஒட்டி மொத நாளே அல்லு இல்லாம ஆக்கிட்டான். மறுநாள் ஆபீஸ்க்கு போனா என்னைத்தவிர எல்லா ஆளுங்களும் மலையாளி. ஏற்கனவே நமக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு. இதுல இது வேறயான்னு தனியா போய் நின்னு ‘எண்ட அம்மே’ன்னு சொன்னா பக்கத்துல இருந்தவன்…
“நிங்கல் கேரளாவோ?” அப்டின்னு கேட்டான் .
“ஹ்ம்ம்! ஆப்ரிக்கா” ன்னு சொல்லிட்டு சீட்ல போய் உக்கார்ந்தா அடுத்தவன் கேட்டான்.
"நீ எந்த கோலேஜ் படிச்ச?"
நான் அந்த காலேஜ் பேர சொன்னேன்
"அந்த காலேஜா? வல்லிய காலேஜானு. பின்னே ஏன் இங்க வந்து வேல செய்து?
"இதுவும் பெரிய கம்பெனிதானே" நான்
"வல்லிய கம்பெனி. நிங்கல் கோலேஜ் பெரியதல்லே. நிங்கல் கோலேஜோட மக்கு ஸ்டுடண்டோ?"
நான் அந்த கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல. அப்புறம் அவங்களே புரிஞ்சிக்கிட்டாங்க
ஒரு வருஷம் துபாய்ல வேல செஞ்சிட்டு மேல படிக்கறதுக்காக செர்டிபிகேட் வாங்கறதுக்காக காலேஜ் வாசல்ல மறுபடியும் போய் நின்னேன். இந்த கதைல வந்த எல்லாம் என் மனசுக்குள்ள fast forward ஆக கலைச்சது அந்த குரல்
“ஹலோ! நீங்கதான் இந்த காலேஜோட மக்கு ஸ்டுடண்டா?”
நான் திரும்பி பாத்ததும்
“உங்கள இல்ல சார்! அந்த தறுதலைய” அப்டின்னு அவன் கைய காட்டின இடத்துல என்ன மாதிரியே ஒருத்தன் நடந்து போய்கிட்டு இருந்தான்.
நான் நெஜமாவே மக்கு ஸ்டுடண்டா? இன்னொரு டிகிரி படிக்கும்போதுதான் அது தெரியும்.
No comments:
Post a Comment